கேரளா: வயநாடு அருகே மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாகிய கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது.
இதையடுத்து வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது. ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கேரளா வந்தனர். கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர்.
The post கேரள வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி..!! appeared first on Dinakaran.