×

1100 ஆண்டுகள் பழமையான தளிகீஸ்வரன் கோயிலில் 9 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருப்பூர்: தமிழ்நாட்டில் பண்டைய கோயில்கள், வழிபாட்டு மையங்களாகவும் மக்கள் சமுதாயத்தின் நிர்வாக அமைப்பாகவும் திகழ்ந்தது. கோயில்களில்தான் பண்டைய கருவூலம், ஆவணக்களஞ்சியம், கல்வி மற்றும் மருத்துவச்சாலைகள், தானியக்கிடங்கு, அன்னசத்திரம், ஆயுத மற்றும் பயிற்சிக்கூடங்கள் என சமுதாயத்தின் உள் கட்டமைப்பு இருந்துள்ளது. இதற்கான சான்றாக பல கல்வெட்டுகள் கோயில்களில் இருந்து கிடைத்துள்ளன.

தமிழகத்தை பொறுத்த வரையில் கிபி 5ம் நூற்றாண்டு முதல் குடைவரை கோயில்களும், கிபி 7ம் நூற்றாண்டு முதல் ஒற்றை கற்கோயில்களும், கிபி 8ம் நூற்றாண்டு முதல் கற்றளிகளும் (கட்டுமான கோயில்களும்) கட்டப்பெற்றன. கொங்கு மண்டலத்தில் கிபி 9ம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக கற்றளிகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கொங்கு மண்டலத்தின் தொடக்க கால கற்றளிகளில் ஒன்றாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் அந்த கற்றளியின் பெயரிலேயே இறைவன் தளிகீஸ்வரர் என அழைக்கப்படும் கோயிலாகவும் திகழ்வது தான் நமது கோயில்பாளையம் மற்றும் கோயில்பாளையம் புதூரில் அமைந்துள்ள தளிகீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

அழகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி மற்றும் கோவில் தர்மகர்த்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புதியதாக ஒரு வட்டெழுத்து மற்றும் எட்டு தமிழ் கல்வெட்டுகளையும் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த கல்வெட்டை பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது:திருப்பூரில் இருந்து தென்கிழக்காக அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலுள்ள பெருவழியில் 14து கிலோ மீட்டரிலும், மேற்கு கடற்கரை நகரமான முசிறியில் இருந்து பாலக்காட்டு கணவாய் வழியாக வெள்ளலூர், சூலூர், காங்கயம், கரூர் வழியாக பூம்புகார் வரை சென்ற பண்டைய கொங்க பெருவெளியில் அமைந்துள்ள கிராமம் தான் கோயில்பாளையம் மற்றும் கோயில்பாளையம் புதூர் ஆகும்.

இங்குள்ள தளிகீஸ்வரர் கோயிலில் மேற்கொண்ட ஆய்வில் கொங்கு மண்டல வரலாற்றுக்குப் புதிய வெளிச்சம் வழங்கும் வகையில் ஒன்பது புதிய கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளோம். இது 1100 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டு ஆகும். வட்டெழுத்து என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கிபி 5ம் நூற்றாண்டு முதல் கிபி 11ம் நூற்றாண்டு வரை இங்கு வழக்கில் இருந்த தமிழ் எழுத்து வடிவம் ஆகும்.
இங்கு தளிகீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டப முன் பக்க வலது சுவரில் 12 வரிகள் கொண்ட வட்டெழுத்துக்களை இந்திய வரலாற்று பேராசிரியர் சுப்பராயலு வாசித்துள்ளார். இக்கல்வெட்டு கிபி 9ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மத்திய பகுதிகளை ஆட்சி செய்த இடைக்கால சேரர் மரபில் வந்த கோக்கண்ட வீர நாராயணன் கல்வெட்டு என்றும் இதில் ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கண்டன் வீர நாரணற்குச் செல்லா நின்ற வாண்ட …. பனணவ ….. கீருடப்பாழ என வருகிறது என்று கூறியுள்ளார்கள்.

இக்கல்வெட்டு மூலம் தன்னால் எடுப்பிக்கப்பட்ட இக்கோயிலுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களின் சன்னிதி பாழ்படும் என்பது பொருளாகும். இது காலத்தால் முற்பட்ட கல்வெட்டு. கொங்கு சோழ மாமன்னன் வீர ராசேந்திரன் காலத்து கல்வெட்டாகும். அதற்கு அடுத்த நிலையில் அவருடைய பேரன் விக்கிரம சோழன் (கிபி 1273 -1305) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பண்டைய கொங்கு 24 நாடுகளில் பொங்கலூர்க்கா நாட்டு பிரிவில் இருந்துள்ளதும், ஒரு பெண் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு கோயில் கருவூலமான பண்டாரத்துக்கு பலஞ்சலாகை அச்சு காசு கோயில் கவிசிய கோத்திர சிவ பிராமணிரிடம் கொடுத்தது போன்ற செய்தியை நாம் அறிய முடிகிறது.

எழுத்துக்கள் பொரிந்துள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. மேலும் இக்கோயில் அருகிலேயே 1000ம் ஆண்டுகள் பழமையான பண்டைய வணிகர்கள் வழிபட்ட அய்யனார் சிற்பமும் உள்ளது. அதேபோல், இவ்வூரில் கல்வட்டத்துடன் கூடிய பண்டைய பெருங்கற்காலச் சின்னங்களும், அலை கோடுகளுடன் கூடிய ஒடுகளும், தாங்கிகளும், இரும்பு கசடுகளும் காணப்படுவதால் இக்கிராமங்களில் தொடர்ந்து 2500 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை செய்து வருவதை அறிய முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post 1100 ஆண்டுகள் பழமையான தளிகீஸ்வரன் கோயிலில் 9 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Talikiswaran temple ,Tirupur ,Tamil Nadu ,
× RELATED தமிழ் சினிமாவில் இதுவரை ஏதும்...