×

இந்தியா ஒயிட்வாஷ் செய்யும்… வெங்கடபதி ராஜு நம்பிக்கை


சென்னை: இலங்கையுடன் நடந்து வரும் டி20 தொடர் குறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் வெங்கடபதி ராஜு நமது நிருபரிடம் கூறியதாவது: டி20 உலக கோப்பை வெற்றி, ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி என்று டி20 தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வென்றுள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டத்திலும் வென்று இலங்கையை ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு அதிகம். இலங்கை அணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இந்திய அணி வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இலங்கை ஆடுகளங்களில் ஏற்கனவே அனுபவம் பெற்ற வீரர்கள் நமது அணியில் இருப்பது நமக்கு சாதகமான அம்சம்.

அடுத்து வரும் ஒருநாள் தொடரிலும் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். பெரிய நெருக்கடிகள் இருக்காது. ஸ்பின்னர்கள் எப்போதும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த முறையும் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் என ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. பிஷ்னோய், பராக் ஆகியோரும் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். ஜிம்பாப்வேயில் தொடர் நாயகன் பட்டம் வென்ற வாஷிங்டன் சுந்தருக்கும் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும். அவர் வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கும்ப்ளேவுக்கு பிறகு இந்திய அணியில் ஸ்பின்னர்களுக்கு நிரந்தர இடம் கிடைப்பதில்லை என்கிறீர்கள். காரணம், புதுப்புது திறமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏராளமான திறமைசாலிகள் இருப்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறு ராஜு கூறினார். இந்திய – இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

The post இந்தியா ஒயிட்வாஷ் செய்யும்… வெங்கடபதி ராஜு நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Venkatapati Raju ,Chennai ,T20 series ,Sri Lanka ,Venkatapathy Raju ,T20 World Cup ,Zimbabwe ,T20 ,Dinakaran ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்