×

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய 5 பெண்கள் கைது

 

நெய்வேலி, ஜூலை 29: நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சி என்ஜேவி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் டால்மியா சங்கர்(60). இவர் வீட்டில் கடைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில், டால்மியா சங்கர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பணம் மற்றும் இரும்பு பொருட்களை திருடி சென்றதாக நெய்வேலி நகர காவல் நிலையத்தில் டால்மியா சங்கர் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் உத்தரவின்பேரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர். அதில், மந்தாரக்குப்பம் பெரியாக்குறிச்சியை சேர்ந்த விஜயன் மனைவி ஜோதி(36), முத்து மனைவி அஞ்சம்மா(21), முருகேசன் மனைவி லேசம்மா(40), சுரேஷ் மனைவி வடிவு(20), வேல்முருகன் மனைவி ரோஜா(22) ஆகியோர் கூட்டமாக வந்து குப்பை எடுப்பது போல் வீட்டை நோட்டமிட்டு பொருட்கள் எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 5 பேரையும் நெய்வேலி நகர போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2,500 மற்றும் காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேற்கொண்ட நபர்கள் நெய்வேலி வடக்குத்து நகர் பகுதி மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் யாரும் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு விலை உயர்ந்த பொருட்களை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

The post வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Dalmiya Shankar ,Mariyappan ,NJV Nagar ,Dinakaran ,
× RELATED போலீசிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கை, காலில் முறிவு