‘தமிழ்நாடு’ புறக்கணிப்பு ஒரு பிரச்னையா? எல்லாமே ஒன்றிய அரசுதான் கொடுக்க வேண்டுமா? வக்காலத்து வாங்கிய அன்புமணி

கோவை: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு எல்லாமே ஒன்றிய அரசுதான் கொடுக்க வேண்டுமா என்று கேட்டு ஒன்றிய அரசுக்கு ஆதரவாக அன்புமணி கருத்து தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தை பொறுத்தவரை ரூ.48 லட்சம் கோடி பட்ஜெட் போட்டுள்ளனர். அதில் தமிழகத்திற்கு எதுவும் வராது என கூறுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெயர் சொல்லவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையா?. எல்லாமே ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. மாநில அரசின் கடமையும் இதில் உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. நீட் தேர்வு இருக்கக்கூடாது அது தேவையில்லாத தேர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அதன் கொள்கைகளை விட்டு விட வேண்டும். நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, சமூக நீதி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது. மேலும் நீட் தேர்வில் இரண்டடுக்கு தேர்வு வரவுள்ளது என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பயிற்சி நிலையங்களை இன்னும் அதிகமாக்கலாம். நீட் என்பது பணக்காரர்களுக்காக வந்தது. பயிற்சி நிலையங்களுக்காக வந்துள்ளது. அரசு பள்ளிக்கூடங்களுக்காக இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் அதில் உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாறு இடம் பெறவில்லை. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

* சரமாரி கேள்வி கும்பிடு போட்டு அன்புமணி எஸ்கேப்
‘ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், நீங்கள் 25 எம்பி இருந்தால் நிதி ஒதுக்கியிருப்பார்கள் என கூறியுள்ளீர்களே’ என பல்வேறு கேள்விகளால் நிருபர்கள் துளைத்தெடுத்தனர். அதற்கு மழுப்பலான பல்வேறு பதில்களை கூறிய அன்புமணி கடுப்பாகி, ‘நீங்க எந்த மீடியா’ என பொறுமை இழந்து தடுமாறினார். ஒரு கட்டத்தில் பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை, தனியாக நிதி ஒதுக்கவில்லை என கேள்வி கேட்டதற்கு நிருபர்களை ஒருமையில் பேசினார்.

தொடர்ந்து, ‘ஆந்திராவை விட தமிழகத்துக்கு நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அன்புமணி கூறினார். உடனே நிருபர்கள், ‘அதற்கான விவரங்கள் இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டனர். அதற்கு அவர் தருகிறேன் என கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். தொடர்ந்து நிருபர்கள் சரமாரி கேள்விகள் எழுப்பியதால், ‘நீங்க ஊதி, ஊதி இதனை பெரிதாக்குகிறீர்கள், ஆள விடுங்க சாமி’ என கும்பிடு போட்டு எஸ்கேப் ஆனார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post ‘தமிழ்நாடு’ புறக்கணிப்பு ஒரு பிரச்னையா? எல்லாமே ஒன்றிய அரசுதான் கொடுக்க வேண்டுமா? வக்காலத்து வாங்கிய அன்புமணி appeared first on Dinakaran.

Related Stories: