புதுடெல்லி: 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வீரர்,வீராங்கனைகள் குவிந்து வருவதால் பாரிஸ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியா சார்பில் இந்த முறை 117 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அனைவரும் பதக்க வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். இந்த முறை வில்வில்தையில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வில்வித்தையில் இந்தியாவில் இருந்து 3 வீரர், 3 வீராங்கனை என 6 பேர் கலந்து கொள்கின்றனர்.
உலக தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் 22 வயதான தீரஜ் பொம்மதேவரா, தான் பங்கேற்ற போட்டிகளில் 81 சதவீத வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டில் 4 போட்டிகளில் பங்கேற்று 2ல் பதக்கம் வென்றுள்ளார். பாக்தாத்தில் நடந்த ஆசியக் கோப்பை முதலாவது கட்டப் போட்டியில் தங்கம் வென்றார். உலக தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள அங்கிதா பகத் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். இந்திய வில்வித்தையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வீராங்கனை தீபிகா குமாரி (30). உலக தரவரிசையில் முன்பு முதலிடத்தில் இருந்து தற்போது 12வது இடம் வகிக்கிறார். உலக அளவிலான போட்டிகளில் அதிக பதக்கம் வென்றுள்ளார். ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வெல்ல முடியவில்லை.இந்த முறை பதக்கம் வெல்லும் உத்வேகத்தில் உள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த வில்வித்தை வீரர்களில் தருண்தீப் ராயும் ஒருவர்.
இதுவரை 3 ஒலிம்பிக்கில் பங்கேற்ற போதிலும் பதக்கம் வென்றதில்லை. 18 வயதான பஜன் கவுர், உலக வில்வித்தை வீராங்கனைகள் தரவரிசையில் 45வது இடத்தில் உள்ளார். முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இவர் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தரும் வீராங்கனைகள் வரிசையில் உள்ளார். இவர்களை தவிர பிரவீண் ஜாதவ் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அதற்கு முன் கால்பந்து, வில்வித்தை போன்ற போட்டிகள் தொடங்கி விடுகிறது. இன்று கால்பந்து போட்டிகள் தொடங்குகிறது. வில்வித்தை நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் ஒரு மணிக்கு வில்வித்தை பெண்கள் தரவரிசை சுற்றுதொடங்குகிறது.
The post பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிகள் நாளை தொடக்கம்: முதன்முறையாக பதக்கம் வெல்லுமா இந்தியா? appeared first on Dinakaran.