சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் அல்வா புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். ஒன்றிய பட்ஜெட் 2024ல், பாஜ கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திராவிற்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்திற்கு சாலைகள், பாலங்கள் கட்ட சிறப்பு நிதி, பேரிடர் மேம்பாட்டு நிதி, புதிய மருத்துவ கல்லூரி, நாளந்தா பல்கலைக்கழகத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது, பீகார் கோயில்களுக்கு சிறப்பு நிதி, ஆந்திர மாநிலத்தில் தலைநகர் அமராவதியை மேம்படுத்த சிறப்பு நிதி என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதேபோல, பாஜ அரசை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் பட்ஜெட் மீதான தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், ‘பீகார், ஆந்திராவின் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் அல்வா சாப்பிடுங்கள்’ என அல்வா புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் அடித்துள்ளார்.
The post அல்வா படம் போட்டு ஒன்றிய பட்ஜெட்டை கிண்டல் அடித்த பிரகாஷ் ராஜ் appeared first on Dinakaran.