டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும் நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்; நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ராகுல் காந்தி எங்களுக்கு எந்த நற்சான்றும் தரத்தேவையில்லை. நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் முடிவுக்காக இருக்கிறோம். நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
2010-ல் அப்போதைய அரசால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. 2010ஆம் ஆண்டு யார் ஆட்சியில் இருந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். 2010ஆம் ஆண்டு தான் முதன் முறையாக மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டது. 2010ல் தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்கான சட்டத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை: மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் appeared first on Dinakaran.