திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.94 ஆயிரம் கோடி செலவழித்து கோதாவரி ஆற்றின் மத்தியில் மெடிகட்டா என்ற இடத்தில் காளேஸ்வரம் அணையை 16.17 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை வைக்கும் விதமாக கட்டப்பட்டது. ஆனால் இந்த அணையில் கடந்த ஆண்டு சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மதகுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சந்திரசேகர் ராவ் அரசு ஊழல் செய்வதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தியதாகவும், இந்த இடத்தில் அணை கட்டுவதற்கான சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறியும் கட்டியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெடிகட்டா அணையில் 100 மீட்டர் உயரமுள்ள நிலையில் 92.40 மீட்டர் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து 3 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வரக்கூடிய நிலையில் 3.41 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர் ராமாராவ் எக்ஸ் தளத்தில், ‘முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட பிரசாரம் பயனற்றதாக மாறி உள்ளது. காங்கிரசின் பொய் பிரச்சாரங்களை தாண்டி மெடிகட்டாவில் தடுப்பணை நிரம்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியும், நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்களும் காளேஸ்வரம் அணை அடித்துச் செல்லப்பட்டதாகவும், மெடிகட்டா இடிந்ததாகவும் பல மாதங்களாக தவறான தகவல்களை கூறி வந்தன. கேடிஆர், கேசிஆர் மீது காங்கிரஸ் கோஷ்டியுடன் காளேஸ்வரம் திட்டத்தின் மூலம் சேற்றை வீச முயன்றால் நீங்கள் வரலாற்றில் வில்லனாக மாறுவதை யாரும் மாற்ற முடியாது. எத்தனை சதிகள் செய்தாலும் தெலங்கானாவின் உயிர்நாடி காளேஸ்வரம் திட்டம். விரைவில் மெடிகட்டா அணை திட்டத்தை பார்வையிட உள்ளேன் என பதிவு செய்துள்ளார்.
The post கோதாவரி ஆற்றில் ரூ.94 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது இடிந்துவிட்டதாக கூறப்பட்ட காளேஸ்வரம் அணை நிரம்பியது appeared first on Dinakaran.