புதுடெல்லி: : ஜம்முவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்ததையடுத்து ஜம்மு பகுதியில் 500 சிறப்பு கமாண்டோ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டம்,மச்சேடி, தேசா வன பகுதியில் கடந்த 8ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் தனித்தனியே நடந்த தீவிரவாத தாக்குதல்களில் ராணுவ கேப்டன் உட்பட 9 பேர் வீரமரணமடைந்தனர். வீரர்கள் சிலர் படுகாயமடைந்தனர். வழக்கமாக காஷ்மீர் பகுதியில் தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக நடக்கும். ஆனால், சமீப நாட்களாக ஜம்முவிலும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களில் ஈடுபடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ராணுவத்தின் வடக்கு படை பிரிவை சேர்ந்த 4 ஆயிரம் வீரர்கள் ஜம்மு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ பாகிஸ்தானில் இருந்து 50 முதல் 55 தீவிரவாதிகள் ஜம்முவுக்குஊடுருவியுள்ளனர். தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு சிறப்பு கமாண்டே படையை சேர்ந்த 500 வீரர்கள் ஜம்முவில் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தன. இதற்கிடையே ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று ஜம்மு சென்று பாதுகாப்பு நிலைமை குறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
The post தீவிரவாத தாக்குதல் அதிகரிப்பு எதிரொலி ஜம்முவில் 500 சிறப்பு கமாண்டோக்கள் குவிப்பு appeared first on Dinakaran.