பூந்தமல்லி: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களது மகள் மீனா(20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சித்தி வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது சித்தப்பா ரவிச்சந்திரன்(45) என்பவருடன் மீனாவுக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனிடையே, மேல் படிப்புக்காக சென்னைக்கு வந்த மீனா, தாய்மாமன் மூலமாக மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று விட்டு மீனா விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, சித்தப்பா ரவிச்சந்திரன் மீனாவை வழிமறித்து பேசியுள்ளார்.
மீண்டும் அவருடன் தகாத உறவை தொடர வேண்டும் என்று கூறி வற்புறுத்தியுள்ளார். இதனை மீனா ஏற்க மறுத்ததால் ரவிச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மீனாவின் கையில் குத்தினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா வலியால் அலறித்துடித்தார். அப்போது, பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்ட ரவிச்சந்திரன் அதே கத்தியால் தனது வயிற்றில் குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த ரவிச்சந்திரனை மீட்ட பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post முறை தவறிய உறவை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு சித்தப்பா தற்கொலை appeared first on Dinakaran.