- அமைச்சர்
- திட்ட முகாம்
- சுற்றுலா
- முதல் அமைச்சர்
- இழிதோரை
- எடப்பள்ளி பஞ்சாயத்து
- குன்னூர்
- நீலகிரி மாவட்டம்
- கூனூர் பஞ்சாயத்து யூனியன்
- முதலமைச்சர் திட்ட முகாம்
- தின மலர்
*சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்
ஊட்டி : குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இளித்தொரை கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 26 பயனாளிகளுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி இளித்தொரை சமுதாய கூடத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.7 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்டகங்கள், 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 15 விவசாயிகளுக்கு ரூ.10.95 லட்சம் மதிப்பில் பயிர்க்கடன் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.11.10 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், அருகிலும், எளிதாகவும் அவர்களை சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக ஊரகப் பகுதிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதற்கட்டமாக துவக்கப்பட்ட இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 2058 முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 8.7 லட்சம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 26 முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் 15 அரசுத்துறைகளை சார்ந்த 44 சேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அனைத்து ஊராட்சிகளிலும் இனிவரும் காலங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படுகின்ற மனுக்களில் ஏற்று கொள்ளப்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே ெபாதுமக்கள் தங்களது ஊரக பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்பைட வசதிகள் பெற்று பயன்பெற வேண்டும். என்றார்.
முன்னதாக எரிசக்தித்துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த்துறை, வீட்டுவசதித்துறை, காவல்துறை, காவல்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், குன்னூர் ஆர்டிஒ சதீஸ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன், இணை இயக்குநர் (மருத்துவ நல பணிகள்) நாகபுஷ்பராணி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 26 பயனாளிகளுக்கு ரூ.11.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.