பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசி பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. குற்றால அருவிகளில் நீராடி மகிழ தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்

குற்றால சீசன், வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்து காணப்படும்.மலைகளில் உள்ள மூலிகைகள் அருவியில் கலந்து வருவதால் அந்நீரில் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது எனவும் நம்பப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாகும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக நேரத்தை நீட்டிக்குமாறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள் பிரதான வாயில் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: