×

ஆனி மாத உண்டியல் காணிக்கை ₹2.57 கோடி அதிக பக்தர்களை அனுமதிப்பதால் காணிக்கை உயர்வு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜூன் 26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில், ₹2.57 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பதால், காணிக்கை மாதந்தோறும் உயர்ந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுகிறது. அதன்படி, ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிவரை நடந்தது.

கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூடியூப்) ஒளிபரப்பப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் ₹2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதோடு, கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் 1.25 லட்சம் பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதந்தோறும் உண்டியல் காணிக்கையாக ₹1 கோடி கிடைத்து வந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் ₹2 கோடி வரை காணிக்கையாக கிடைத்தது. அதன்படி, இந்த மாதமும் உண்டியல் காணிக்கை ₹2 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆனி மாத உண்டியல் காணிக்கை ₹2.57 கோடி அதிக பக்தர்களை அனுமதிப்பதால் காணிக்கை உயர்வு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 2வது திருமணம் செய்து கொள்வதாக...