×

கள்ளக்குறிச்சி அருகே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 16 பேர் பலி: மதுவிலக்கு பிரிவு போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்.! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி மற்றும் மதுவிலக்குப் போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 16 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியை சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களில் பிரவீன்குமார் (26) நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சுரேஷ் (40) மற்றும் சேகர் (59) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள் உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்குப் பின்பு தெரியவரும். மேற்கண்ட 26 நபர்களில் வடிவு மற்றும் கத்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில் உள்ளது. அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும், உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி அருகே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 16 பேர் பலி: மதுவிலக்கு பிரிவு போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்.! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,CBCIT ,Chennai ,Chief Minister ,CBCID ,SP ,Prohibition ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...