×

கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலை பண்பாட்டு துறையின் வாயிலாக, தமிழ்நாட்டை சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலை துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகையும் வழங்கி வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடம் இருந்து 2024-2025ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்.

* கலைச்செம்மல் விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம்.

* விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீனபாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பிக்கும் அல்லது பரிந்துரை செய்யப்படும் படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலைப் படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் இணைக்க வேண்டும்.

* படைப்பாளர் குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக் குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

* மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில், தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலை படைப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

* படைப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய முழு தன்விவரக்குறிப்பு இடம் பெறுதல் வேண்டும். விண்ணப்பங்கள் இயக்குநர், கலை பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், 2ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The post கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kalaichemmal ,Chennai ,Director of ,Arts ,and Culture Department ,Department of Arts and Culture ,Tamil Nadu ,
× RELATED இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள்...