×

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாபர் சாதிக் அளித்த தகவலின்படி, அவரது நெருங்கிய நண்பரான சதா(எ)சதானந்த் என்பவர் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கைதான ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து நேரில் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். இதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு ஜாபர்சாதிக் மனைவி அமீனாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Zafar Sadiq ,Chennai ,Jafar Sadiq ,India ,Samman ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை