×

கோடை காலத்தையொட்டி சென்னையில் கேன் வாட்டர் விற்பனை அதிகரிப்பு; தினசரி 30 மில்லியன் லிட்டர் பயன்பாடு

சென்னை: இந்தியாவின் 6வது பெரிய நகரமாக விளங்கும் சென்னையில், கோடைகாலத்தில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு இன்றி இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும், கோடைகாலத்தில் கேன் வாட்டர் பயன்பாடு கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாக இருக்கும் சென்னையில் ஒரு சதுர கி.மீட்டருக்கு 26 ஆயிரம் முதல் 27 ஆயிரம் பேர் வரை வசிப்பதாக மாநகராட்சி தரவுகள் கூறுகின்றன. தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு சென்னையில் குடிநீர் தேவை என்பது பிரதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், சென்னைக்கு தினசரி 1300 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது. இதில் குடிநீர் வாரியம் சார்பில் 1,040 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 141 கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து 303 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 546 கன அடியும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூரில் இருந்து 34.41 மில்லியன் லிட்டர், நெம்மேலி பழையது 72.64 மில்லியன் லிட்டர், புதியதில் 85.38 மில்லியன் லிட்டர் நீர் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. அதாவது குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர்த் தேக்கங்களில் இருந்து மொத்தக் கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 8,702 மில்லியன் கன அடி வரை நீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாது, கோடைகாலத்தில் பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாடு இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் காரணமாக பற்றாக்குறை இல்லாமல் 90 சதவீதம் வரை சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், கோடைகாலத்தில் கேன் வாட்டர் விற்பனை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு வாட்டர் கேன் விற்பனையாளர் சங்கத் தலைவர் ஷேக்ஸ்பியர் கூறியதாவது:
கோடை காலத்தையொட்டி சென்னையில் கேன் வாட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, வெயில் காலத்திற்கு முன்பு தினசரி 20 மில்லியன் லிட்டர் வரை (2 கோடி லிட்டர்) விற்பனை செய்து வந்தோம். தற்போது 30 மில்லியன் லிட்டர் (3 கோடி லிட்டர்) வரை சிறியது முதல் பெரிய கேன்கள் வரை விற்பனையாகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு அதிகப்படியாக 20 லிட்டர் கேன்கள்தான் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, 300 எம்.எல், 500 எம்.எல் மற்றும் 1 லிட்டர் பாட்டில்கள் 25 லட்சம் வரை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறன. குறிப்பாக, குடியிருப்பு வீடுகளுக்கு மட்டும் 60 சதவீதம் வரை கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை என்பது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கி ஜூன் மாதம் இறுதிவரை மட்டுமே இருக்கும். மழைக்காலம் தொடங்கிவிட்டால் சராசரி நிலைக்கு திரும்பி விடும்.

அதேபோல், தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திய தரச்சான்றிதழ் மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் 1000த்திற்க்கும் மேற்பட்ட போலி ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றை அரசு முறைப்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த ஆலைகள் மூலம் பாதுகாப்பற்ற கேன் குடிநீரினால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், அதில் நடக்கும் நிலத்தடி நீர் சுரண்டலையும் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோடை காலத்தையொட்டி சென்னையில் கேன் வாட்டர் விற்பனை அதிகரிப்பு; தினசரி 30 மில்லியன் லிட்டர் பயன்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,India ,Tamil Nadu ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...