×

கூடுவாஞ்சேரி அருகே சோகம் பேருந்து மோதி பைக்குகளில் சென்ற 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: மேலும் ஒருவர் படுகாயம், டிரைவர் கைது

கூடுவாஞ்சேரி: பொத்தேரி அருகே தனியார் நிறுவன பேருந்து 2 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (26). இவர் மறைமலை நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவரது பின்னால் கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரத்தைச் சேர்ந்த லல்லுராம் என்பவரின் மகன் மேகராஜன் (30) மற்றொரு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் வள்ளாஞ்சரியில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டீன் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார்.

இதில் நள்ளிரவு 2 மணியளவில் கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே இருவரும் சென்றபோது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக பின்னால் வந்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன பேருந்து இருவரது பைக்குகள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் சந்தோஷ்குமார் மற்றும் மேகராஜன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.மேலும் பேருந்தில் வந்த பிரபாகரன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

சக வாகன ஓட்டிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொத்தேரியில் உள்ள போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆலந்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன பஸ் டிரைவர் ஏழுமலை (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. விபத்தில் 2 வாலிபர்கள் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

* டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்
விபத்தில் இறந்த மேகராஜனுக்கு பாவனா (24) என்ற மனைவியும், நட்சத்திரன் (4), அம்ரீஷ் (2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விபத்தில் இறந்த மேகராஜனின் உடலை இவர்களது சொந்த ஊரான டெல்லிக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து விமானம் மூலம் அவரது உறவினர்கள் நேற்று மாலை எடுத்துச் சென்றனர்.

The post கூடுவாஞ்சேரி அருகே சோகம் பேருந்து மோதி பைக்குகளில் சென்ற 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: மேலும் ஒருவர் படுகாயம், டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Kuduvanchery ,Potheri ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED நந்திவரம் – கூடுவாஞ்சேரி...