×

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்

சென்னை: ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 19ம் தேதி தேர்தல் நாளன்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்தபோது அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர். இரு தரப்பிரனருக்கும் இடையே 2021ல் அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு கலைமணி, ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக மற்றொருபுறமும் வாய்ச்சண்டையும், தாக்கியும் கொண்டுள்ளனர்.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள, ஜெயக்குமாரின் மனைவி கோமதி தலையிட்டு தடுக்க முயலும்போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயகுமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ்குமார் காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயகுமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 11 கண்ணுற்ற சாட்சிகளையும், 5 ஊர்காரர்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சிகளையும் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 10 எதிரிகளில் கலைமணி, ரவி, அறிவுமணி, மேகநாதன் மற்றும் தீபா ஆகிய 5 பேர் கடந்த 20ம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். புலன் விசாரணையில் சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளை கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயகுமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமுமே காரணம் என்பது சாட்சிகளின் வாக்குமூலம் முதல் தகவல் அறிக்கை புகார் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதுதவிர வேறு எந்த காரணமும் விசாரணையில் புலப்படவில்லை. வழக்கில் இதுவரை 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரே புகாரில் 2021ல் பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்த தகராறு தான் கோமதியின் இறப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையிலும் இதுவே உண்மை என புலனாகிறது. மேலும் எஞ்சிய 2 பேரை கைது செய்தும் காயம் அடைந்தவருக்கான காயச்சான்றிதழ் பெற்றும் இறப்பிற்காக காரணம் குறித்த மருத்துவ அறிக்கை பெற்றும் அனுமதிக்கப்பட்ட புலன் விசாரணை காலத்திற்குள் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Srimushnam ,Chennai ,Srimushnam police station ,election day ,Sreemushnam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...