×

மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!

நன்றி குங்குமம் தோழி

தமிழர்களின் தொன்மையான மருத்துவ முறையாகக் கருதப்படும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், நொச்சி இலை ஆவி பிடித்தல் என கொரோனா பெரும் தொற்று வெகுவாகத் திரும்பி பார்க்க வைத்தது. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருப்பதாய் சொல்லும் மருத்துவ நிபுணர் டாக்டர் மானக்சா, ‘நலம் தரும் சித்த மருத்துவம்’ என்கிற தலைப்பில் 14 புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருப்பதுடன், மகளிருக்கு பிரத்யேகமாக ‘மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்’ என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மாதவிடாய்கால வயிற்றுவலி, முகப்பரு தோன்றுதல், தோல் வறட்சி, தலைமுடி உதிர்தல் பிரச்னைகளுக்கான காரணங்களையும், அதற்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு காண்பதையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிபவர் டாக்டர் Y.R. மானக்சா. கைநாடி பிடித்து நோய்களை நிதானிப்பதில் புலமை பெற்றவர். பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் B.S.M.S., பட்டப் படிப்பையும், அதே கல்லூரியில் பட்ட மேற்படிப்பையும் (M.D) முடித்தவர். புகழ் பெற்ற சென்னை ‘இம்காப்ஸ்’ மருத்துவமனையின் கௌரவ மருத்துவராகவும், டாக்டர் சுசீந்திரன் வர்ம பிசியோதெரபி கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். குழந்தையின்மை துறையில் பல்வேறு மூலிகை ஆய்வுகளை மேற்கொண்டு, பிறந்த மூலிகைக் குழந்தைகள் ஏராளம். மகளிருக்கு ஏற்படும் மாதவிடாய் காலப் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் குறித்து டாக்டர் மானக்சாவிடம் உரையாடியதில்…

முதலில் சித்த மருத்துவம் குறித்து விளக்குங்கள்…?

சித்தர்கள் ஏராளமான விஷயங்களை சித்த மருத்துவத்தில் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு மூலிகைக்குப் பின்பும் நோய் தீர்க்கும் மருந்துக்கான கூறுகள் இருக்கிறது. இதில் நோய் தீர்க்கும் மூலிகைகள் அதற்குரிய சில பண்புகளைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு நித்திய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் ஒருவித மூல மருந்து ரத்தப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய்க்கு வழங்கப்படும் முக்கிய சிகிச்சையான ஹீமோ தெரபி சிகிச்சைக்கு இதுதான் முக்கிய மருந்து. அதேபோல் பன்றிக் காய்ச்சலுக்கான முக்கிய மருந்து அன்னாசி பழத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. இதுபோல ஏராளமான மூலிகைகள், சில ஹயர் என்ட் மருத்துகள் சித்த மருந்துவத்தில் உள்ளன. நானோ சயின்ஸ்க்கான அடிப்படையும் இதுவே.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னை குறித்து…

பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் கால குருதிப்போக்கு இயல்பானது. சாதாரணமாக 3 முதல் 7 நாட்கள் ரத்தப்போக்கு இருக்கும். 7 நாட்களுக்கு மேலாக ரத்தப்போக்கு அதிகரித்து காணப்படும் நிலை, அதிகரித்த ரத்தப் போக்கு அல்லது பெரும்பாடு என அழைக்கப்படுகிறது.

அதேபோல், ஒரு மாதவிடாய் நிகழ்வுக்கும், அடுத்த மாதவிடாய் நிகழ்வுக்கும் இடையில் திடீரென ஏற்படும் குருதிப் போக்கிற்கும் பின்வருபவை காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

* கருப்பையில் வளரும் சாதாரணக் கட்டிகள் (Fibroid Uterus)
* கருப்பை உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases)
* குறை தைராய்டு நோய் நிலைகள் (Hypothyroidism)
* சினைப்பைகளில் ஏற்படும் நீர்கட்டிகள் (PCOS)
* நாளமில்லா சுரப்பிகளின் கோளாறுகள் (LH, FSH, Progesterone, Estrogen)
* உளவியல் ரீதியான சோர்வுகள்
* திடீரென கேள்வியுறும் அதிர்ச்சியான தகவல்கள்
* கருப்பை பாகங்களில் ஏற்படும் விபத்துகள்
*நெடுந்தூரப் பயணங்கள்.

மாதவிடாய் கால வயிற்று வலிக்குக் காரணம்…

மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாய் காலங்களிலும் கடுமையான வயிற்று வலியால் சிலர் துன்புறுவர். சிலருக்கு வலியுடன் வாந்தி, வயிற்றுப் பொருமல், முதுகுவலி சேர்ந்தோ, தனித்தோ காணப்படும். பின் வருபவை இதற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

* கருப்பை பலவீனமாக இருத்தல்
* கருப்பை சளிக்கலசம் துண்டு துண்டாக வெளியேறுதல்
* பருத்த கருப்பைகள் (Bulky Uterus)
* கருப்பையில் ஏற்படும் நோய் நிலைகள் (Pelvic Inflammatory disease)
* சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்றுகள் (Cystitis).

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தடை குறித்து…

மாதவிடாய் தடை இரண்டு வகைப்படும். அதில் ஒன்று பெண் பருவம்அடையாமலே இருப்பது. இரண்டாவது பருவமடைந்த பின்பு மாதவிடாய் சரியாக வராமலிருப்பது. பருவமடையாமலிருப்பதற்கு நாளமில்லா சுரப்பிகள் செயல்படாமலிருத்தல், கருப்பை வளர்ச்சிக் குறைவு, பிறப்பிலேயே சினைப்பை இன்றி இருத்தல், மரபணு சார்ந்த நோய்கள் காரணமாக இருக்கிறது. பருவமடைந்த பின்பு மீண்டும் மாதவிடாய் வராமலிருப்பதற்கு பின்வருபவை காரணங்களாக உள்ளன.

* ரத்தத்தில் இரும்புச் சத்துக்களின் குறைபாடுகள்
* சினைப்பைகளில் தோன்றும் நீர்க்கட்டிகள் (PCOS)
* நாளமில்லா சுரப்பிகளின் சிறு குறைபாடுகள் (LH, Prolactin, FSH, Estrogen, Progesterone)
* உளவியல் பிரச்னைகள்
* நெடுந்தூரப் பயணங்கள்.

மாதவிடாய் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வு?

உணவுதான் முக்கியம். பெண்களின் ஆரோக்கியம் உணவில்தான் உள்ளது. ஆரோக்கியம் தரும் புரதச் சத்துள்ள உணவுகளை பெண்கள் அதிகமாக எடுக்க வேண்டும்.13 முதல் 15 வயதே பெண் பூப்படையும் சரியான வயது. இதில் தாமதம் ஏற்பட்டால் பிரச்னைதான். இதற்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. இதற்கென சூரணம், லேகியம் போன்றவை சித்த மருத்துவத்தில் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்தல் வேண்டும்.

குறிப்பாக பெண் முதல் பருவம் அடையும் (menarche) நேரத்தில் உளுந்தம் களி, வெந்தயக் களி, அரிசி மாவில் செய்த பண்டங்கள், நாட்டுக் கோழி முட்டையுடன் நல்லெண்ணெய் இணைத்துக் கொடுப்பது போன்றவை, உறுப்புகளை பலப்படுத்தி மாதவிடாய் நேரப் பிரச்னைகள், குழந்தைபேறு கால பிரச்னைகளை சரிசெய்து கொடுக்கும். அத்திப்பழம் பெண்ணின் கர்ப்பப்பையினை பலப்படுத்தும்.

கீரை வகையிலும் சிறுகீரை, பசலைக் கீரை, சிவப்புத் தண்டுக்கீரை பெண்களுக்கு மிகவும் நல்லது. பெரும்பாடு எனப்படும் மாதவிடாய் நேர அதீத ரத்தப் போக்கை இந்த வகைக் கீரைகள் கட்டுப்படுத்தும்.

பெண்களின் மாதவிடாய் காலம் 3 நாட்களுக்கு உட்பட்டு அல்லது 7 நாட்களுக் அதிகமாக இருந்தால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அவர்கள் உண்ணக் கொடுக்க வேண்டும். சுவரொட்டி இதற்கு சிறந்த தீர்வு. ரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபினை இது சமன்படுத்தும். கரிசலாங்கண்ணி கீரையிலும் இரும்புச் சத்து உள்ளது. இதை வாரத்தில் ஒருநாள் எடுத்தால், ஹீமோகுளோபின் பிரச்னையை சரி செய்யும்.

மகளிருக்கு உருவாகும் புற்று நோய் குறித்து…

மார்பக புற்று நோய் (Breast Cancer), கருப்பை புற்று நோய் (Carcinoma of Uterus) இரண்டும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.மார்பகங்களில் திடீரென ஏற்படும் கடினத் தன்மை, மார்பக முலை ஒருபுறமாய் சாய்தல், மார்பகத்தில் ஏற்படும் கசிவுகள், குருதிக் கசிவுகள், மார்பகத்தை சுற்றியுள்ள நிணநீர் கோளங்கள் திடீரென வீங்கி தடித்து காணப்படுதல், உடல் களைப்பு, எடை குறைதல், மார்பகம் அழுத்தி பார்க்கும் போது கனமாகத் தோன்றுதல் என ஏதாவது ஒன்று இருந்தால் மார்பகப் புற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

கருப்பை புற்று நோய்களில் கருப்பைக் கழுத்து புற்று நோய்தான் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக (HPV என்ற வைரஸ்) கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் நாள்பட்ட உடலுறவு உராய்வுகள், கருப்பையினுள் வைக்கப்படும் வளையங்கள், கருத்தடை மாத்திரைகளின் பின் விளைவுகள், நாளமில்லா சுரப்பிகளின் விகற்பங்கள் போன்ற பல காரணங்கள் மற்றும் காரணமில்லாமலும் இந்நோய் ஏற்படுகின்றது.

மாதவிடாய் நின்ற பின்பு ஏற்படும் ரத்தப் போக்குகள். சிவப்பு கலந்த வெண்நிறக் கசிவுகள், உடல் எடை குறைதல், அதிகரித்த மஞ்சள் நிற கசிவுகள், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் சுரம் போன்ற அறிகுறிகளில் ஒன்றோ இரண்டோ இருந்தால் மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அவசியம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!