×

இன்னும் 2 நாளில் வாக்குப்பதிவு கேரளாவில் அனல்பறக்கும் தீவிர இறுதிக்கட்ட பிரசாரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் 194 பேர் போட்டியிடுகின்றனர். கோட்டயம் தொகுதியில் அதிகமாக 14 பேரும், ஆலத்தூரில் குறைவாக 5 பேரும் போட்டியிடுகின்றனர். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

அதேபோல் இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பிடிஜேஎஸ் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இடதுசாரி கூட்டணிக்கு ஆலப்புழா தொகுதி மட்டுமே கிடைத்தது. தற்போதைய அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஷைலஜா, சுனில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொலிட் பீரோ உறுப்பினருமான எளமரம் கரீம், கொல்லம் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ் உள்பட இடதுசாரி கூட்டணியில் முக்கிய தலைவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு, சசி தரூர் மற்றும் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் திருவனந்தபுரம், நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி போட்டியிடும் திருச்சூர் ஆகிய தொகுதிகள் தான் நட்சத்திரத் தொகுதிகளாக கருதப்படுகிறது. இந்த தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரம் முடிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 26ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார். கேரளாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,49,159 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகமாகும். 1,43,33,499 பெண் வாக்காளர்களும், 1,34,15,293 ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.

The post இன்னும் 2 நாளில் வாக்குப்பதிவு கேரளாவில் அனல்பறக்கும் தீவிர இறுதிக்கட்ட பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...