×

பெண் கொலையில் அவதூறு அண்ணாமலை மீது வழக்கு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலையில் அவதூறு பரப்பிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கலைமணி தரப்பினருக்கும் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன் கோயில் திருவிழாவில் வரவு- செலவு பார்த்ததில் தகராறு ஏற்பட்டது. அதில் ஜெயக்குமாரை கத்தியால் தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் கலைமணி மீது வழக்கு உள்ளது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி தேர்தலை முன்னிட்டு தண்டகாரங்குப்பத்தில் வாக்கு செலுத்திவிட்டு ஜெயக்குமார் தம்பி ஜெயசங்கர், தம்பி மகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வாகனத்தை வழிமறித்து வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணி தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் நீர்தேக்க தொட்டி அருகே ஜெயக்குமார் தரப்பினரை கலைமணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது ஜெயக்குமார் மனைவி கோமதி (43) இதனை தடுக்க முற்பட்டபோது கீழே தள்ளியதில் கோமதி மயங்கி விழுந்தார்.

பின்னர் அவரை அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் ராபின்சன், உதவி ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ரவி(42), அறிவுமணி(44), கலைமணி (46), மேகநாதன் (62), கலைமணி மனைவி தீபா(39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலைக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் இது குறித்து அவதூறு கருத்து பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சண்முகம், ஹரி பிரபாகரன், சின்ஹா ஆகிய 3 பேர் தங்களது சமூக வலைதளங்களில் பக்கங்களில் மேற்கொண்ட கொலை தொடர்பாக அவதூறு பரப்பினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 3 பேர் மீதும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுகவினர் மீது அவதூறு கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக ஸ்ரீமுஷ்ணம் திமுக நகர இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் கொலையில் அவதூறு அண்ணாமலை மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Srimushnam ,BJP ,president ,Jayakumar ,Pakirimaniyam ,Cuddalore district ,Kalaimani party ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...