×

தாய், தங்கைகளை அடித்து உதைத்த தந்தை படுகொலை: 14 வயது சிறுவன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தாய், தங்கைகளை அடித்து உதைத்த தந்தையை வெட்டிக் கொன்ற 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்தவர் சக்தி (எ) சத்யமூர்த்தி (37), சமையல் தொழில் மற்றும் ஆடு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு அனுஷியா என்ற மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். தினமும் வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வரும்போது சத்யமூர்த்தி குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் 2 மகள்களை அவதூறாகப் பேசி அடித்து உதைப்பாராம். இதை 14 வயது மகன் கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த சத்யமூர்த்தி, தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 மகள்களை அவதூறாக பேசி அடித்து துன்புறுத்தினார். சத்தம் கேட்டு எழுந்த 14 வயது சிறுவன், தந்தை இருக்கும் இடத்திற்கு வந்து போதையில் தாயை அடிப்பதை தடுக்க வந்தான். அப்போது மனைவியை ஆடு வெட்டும் கத்தியால் வெட்ட முயன்றார். இதைப் பார்த்த சிறுவன் ஆத்திரமடைந்து ஆடு வெட்டும் கத்தியை தந்தையிடம் இருந்து பிடுங்கி அவரது தலையில் ஓங்கி வெட்டினான். இதில் ரத்த வெள்ளத்தில் சத்யமூர்த்தி மயங்கி சரிந்தார். சத்தம் கேட்டு திரண்ட அக்கம், பக்கத்தினர் சத்யமூர்த்தியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்து வந்த டவுன் போலீசார் அங்கிருந்த 14 வயது சிறுவனை கைது செய்தனர்.

The post தாய், தங்கைகளை அடித்து உதைத்த தந்தை படுகொலை: 14 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Sakthi (A) Sathyamurthy ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!