×

கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால் தென்னை மரங்கள் நாசம்: விவசாயிகள் கவலை

வருசநாடு, ஏப். 18: கடமலைக்குண்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் ஏழுசுனை மலை அடிவாரத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் முருங்கை, தென்னை, முந்திரி, இலவம்மரம் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் தங்கராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியது. அதேபோல ஒரு பெரிய தென்னை மரத்தை மோதி வேரோடு சாய்த்தது. இரவு தோட்ட காவலுக்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

நேற்று காலை வழக்கம் போல தங்கராஜ் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தென்னை மரங்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தோட்ட பகுதியில் ஆங்காங்கே யானையின் சாணங்கள் இருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். யானைகள் கூட்டம் தொடர்ந்து அதே மலையடிவார பகுதியில் சுற்றித் திரிகிறது. எனவே அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தோட்டங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினரும் தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பகுதியில் யானைகள் கூட்டம் மற்றொரு தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்களை பாதுகாப்பதற்கு வனத்துறை இன்னும் கூடுதல் விழிப்புணர்வு செய்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால் தென்னை மரங்கள் நாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Kadamalaidu ,Seventh Mountain ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!