×

எதிரி, துரோகிகளை இனம் காண்பீர்: தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ, பாழ்படுத்திய அதிமுகவை ஒருசேர வீழ்த்துங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர், பொருளாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை திட்டங்கள், இந்தியாவே பாராட்டுகிறது, இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நமது திட்டங்களைப் பின்தொடர்கிறது. எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள். பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்கிறார்.

பழனிசாமி, உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டயலாக் வருமே, ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’ என்று. அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பாஜ அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும். நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம் பழனிசாமி அவர்களே, கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே, அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது இன்னொரு விருது காத்திருக்கிறது. ஜூன் 4ம் தேதி நாற்பதுக்கு நாற்பது என்ற விருது.

பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, திமுக அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அதிமுக சில இடங்களில் வென்று பா.ஜ.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்” என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்று வாய்தா வாங்கியிருக்கிறார். இதுதான் அவரின் பா.ஜ. எதிர்ப்பு லட்சணம்.

இந்த தேர்தலின் ஹீராவான தேர்தல் அறிக்கையை திமுகவும் – காங்கிரசும் வெளியிட்டிருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரை ஆறுவழிச் சாலையாக்கும் பணி விரைந்து முடிக்கப்படும், அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்குக் காஞ்சிபுரம் வழியாக செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி உற்பத்தி தொடங்க உரிய நடவடிக்கை, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

காஞ்சிபுரமும், சென்னையும் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அதற்கு ஒரு ரூபாயாவது ஒன்றிய அரசு நிவாரணமாகத் தந்ததா? இன்று வரை நிதியைத் தரவில்லை. மாநில முதலமைச்சரான என்னிடமே, பொய் சொன்னவர் தான் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். மோடி சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜவால் வளரவே முடியாது.

பத்தாண்டுகளாக நாட்டை பாழ்படுத்திய நிலை இனியும் தொடரக் கூடாது. “வேண்டாம் மோடி”என்று ஒட்டு மொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது. இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும், வரலாறுகள் திரித்து எழுதப்படும், அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும், மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும். புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் சட்டம் நாட்டை ஆளும், இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான்! இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல! நாடு காக்க இன்றே தயாராகுங்கள்.

பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக-தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுக ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள். “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது ஜனநாயகமும் – சமத்துவமும் – சகோதரத்துவமும் வென்றது” என்ற புதிய வரலாறு எழுத, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும். நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும், தமிழ்நாட்டைக் காக்கட்டும், நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும், பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post எதிரி, துரோகிகளை இனம் காண்பீர்: தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ, பாழ்படுத்திய அதிமுகவை ஒருசேர வீழ்த்துங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,AIADMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Sriperumbudur ,treasurer ,DR. ,Balu ,Kanchipuram ,Selvam ,Lok Sabha election ,Manimangalam, Kanchipuram district ,India ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…