×

முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு அதிமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

திருவொற்றியூர்: முதல்வர் குடும்பம் குறித்து அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகிகள் 2 பேர் மீது, 5 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர் டிஎஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக அவை தலைவராக உள்ளார். ஜீவல்லால் நகரை சேர்ந்தவர் அஜாக்ஸ் பரமசிவம் (60). திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் தேர்தல் பிரசார தெருமுனை கூட்டம் சாத்துமா நகர் பகுதியில் நடந்தது.

அப்போது மைக்கில் பேசிய அதிமுக அவை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதியான கார்த்திகேயன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முதல்வரின் குடும்பத்தை அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் போலீசார், முதல்வரின் குடும்பத்தை அவதூறாக பேசிய ராஜேந்திரன் மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவின் கீழ், பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு அதிமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chief Minister ,Tiruvottiyur ,Rajendran ,Tiruvottiyur DSR Nagar ,President ,Tiruvallur East District ,Jeevallal… ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...