×

நீதிமன்ற நிறுவன அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: மன்னிப்பை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டம்

புதுடெல்லி: நவீன மருந்துகள் தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவியல் பூர்வமான உண்மைகள் அல்லாத தகவல்களை பரப்பும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்கள் தந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகியோர் தெரிவித்த நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுத்து வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்து.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து இருவருக்கும் நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் கூடிய காட்டமான கேள்விகளை சரமாரி கேட்டனர்.

அதில், ‘‘இந்த விவகாரத்தில் மன்னிப்பு தொடர்பான பிரமாண பத்திரம் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் விளம்பரமாக பார்த்துள்ளது தெளிவாகியுள்ளது. மேலும் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் மார்ச்.30ம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்ட பிரமாண பத்திரத்தில் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் உண்மையில் இருவரின் விமான பயணம் டிக்கெட்டுகளும் பரமாண பத்திரம் தாக்கல் செய்த பிறகுதான் பதிவு செய்யப்பட்டிருந்தது. உங்களது மன்னிப்பு என்பது வெறும் வார்த்தைகளாக தான் இருக்கிறதே தவிர அது கண்டிப்பாக நடத்தையில் தெரியவில்லை. எனவே உங்களது மன்னிப்பை நாங்கள் ஏற்க முடியாது.

குறிப்பாக இந்த வழக்கில் இதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வழங்கியும் உங்களது தவறை நீங்கள் திருத்திக் கொள்ளவில்லை. நீங்கள் காட்டும் அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்கள் மீது காட்டக் கூடாது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போதும் உங்களது மன்னிப்பை நிராகரித்துள்ளோம். அதேப்போன்று பொய்யான விளம்பரத்தை மேற்கொண்ட பதஞ்சலி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் அத்தனை பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். என்று தெரிவித்தனர்.

அப்போது பாபா ராம்தேவ் தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் வேண்டுமென்றால் பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மன்னிப்பு கேட்கிறோம் என்ற பெயரில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. நேரில் ஆஜர் ஆவதை தவிர்க்க தவறான தகவல்களை நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறார்கள். அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு ஏப்ரல் 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

The post நீதிமன்ற நிறுவன அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: மன்னிப்பை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Baba Ramdev ,NEW DELHI ,Patanjali ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க...