×

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கோவில்பட்டி, மார்ச் 26: கோவில்பட்டி அருகே உள்ள ஓடக்கரைபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி மகன் ராமச்சந்திரன் (27). இவர், கழுகுமலை பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் உள்ள கிளிக்கூண்டு கருப்பசாமி கோயிலுக்கு பக்தர்களை ஆட்டோவில் அழைத்து சென்றார். பயணிகளை இறக்கிவிட்டு அழகப்பபுரம் வழியாக ஓடக்கரைக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

விட்டிலாபுரம் பகுதியில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது. இதில் டிரைவர் ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ராமச்சந்திரன் வரும் வழியிலேயே இறந்தது தெரிய வந்தது. விபத்தில் இறந்த ராமச்சந்திரனுக்கு முத்துச்செல்வி (24) என்ற மனைவியும், மகன் கவிநேஷ் (2), மகள் கனிஷ்கா (2) என 2 குழந்தைகள் உள்ளனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Marichami ,Ramachandran ,Odakkaraipatti North Road ,Kalgukumalai ,Panguni Uthra festival ,Vanaramutti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!