×

தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.423 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; பழமையான திருக்கோயில்கள் நிறைந்த மாவட்டம் மயிலாடுதுறை. மண் மணமும், நெல் மணமும் கலந்து வீசுவது டெல்டா மாவட்டங்களின் சிறப்பு.

காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கும் மாவட்டம் மயிலாடுதுறை. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றனர். அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு திமுக அரசு. அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு.

திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் 2 நாட்கள் முன் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவோணம் புதிய தாலுகா இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திருவோணம் வட்டம் உருவாக்கப்படும் என்று 2023-ல் சட்டப்பேரவையில் அறிவித்ததை செயல்படுத்தியுள்ளோம். மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது திராவிட மாடல் ஆட்சி. மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும். முத்துப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம் அமைக்கப்படும்.

திருவாரூரில் ரூ.2.5 கோடியில் உலர்மின் நிலையம் அமைக்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.44 கோடி மதிப்பில் கடைமடை நீர் ஒழுங்கிகள் அமைக்கப்படும். மக்களின் கருத்துகளை அறிய நீங்கள் நலமா திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர், முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு கருத்தை கேட்டறிய உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்ய திட்டம் செயல்படுத்தப்படும். மக்களின் கருத்துகளை அறிய நீங்கள் நலமா திட்டம் மார்ச் 6 முதல் செயல்படுத்தப்படும்.

தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் தொடங்கி இருக்கிறார். வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி. அண்மையில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள் இவ்வாறு கூறினார்.

 

The post தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Modi ,PM K. Stalin ,K. Stalin ,Mayiladuthura ,Thiruvarur ,Nagai ,Dinakaran ,
× RELATED ஆட்சியை காப்பாற்ற பாரபட்சமாக நிதி...