வல்லநாடு அருகே கோர விபத்து வேன் மீது டிப்பர் லாரி மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

தூத்துக்குடி: வல்லநாடு அருகே நேற்று அதிகாலை வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டம் ரஹ்நாத் மந்தீர் பகுதியைச் சேர்ந்த 17 பேர் கடந்த 17ம் தேதி தமிழகத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்க்க ரயிலில் ராமேஸ்வரம் வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு நேற்று முன் தினம் இரவு புறப்பட்டனர். வேன் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடி, மாவட்டம் கீழவல்லநாடு துப்பாக்கி சுடுதளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்தது.

அப்போது எதிரே தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி வேன் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேனின் முன்பகுதியில் இருந்த அமித் மனைவி சுமன் (32), அவரது உறவினர் மனைவி பார்வதி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

அந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த சஞ்சனா (21), பங்கஜ் (40), கம்லேஷ் (54), கர்னல் (60), அம்ஜிசர்மா (35), பிரேமா (76), கீதாதேவி (58) உள்பட 15 பேர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். இதில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வயது குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வல்லநாடு அருகே கோர விபத்து வேன் மீது டிப்பர் லாரி மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: