×

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் குறித்து நூல் எழுதிய பேராசிரியருக்கு மெமோ: தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம்

சேலம்: பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜ ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இவரை, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.

தொடர்ந்து, ஏற்கனவே இவர் எழுதிய `மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூலின் மறுபதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாக அனுமதி பெறாமல், இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்பிரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சார தன்மையுடைய விவகாரங்களுக்கு, எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதியதற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினர், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விசிக பொதுச் செயலாளர் வன்னிஅரசு வெளியிட்டிள்ள அறிக்கையில்,‘‘பேராசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது, வாசிப்பது, எழுதுவது தான். தற்போது அதையே செய்யக்கூடாது என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முட்டுக்கட்டையாக இருப்பது கண்டனத்திற்குரியது,’’ என்று தெரிவித்துள்ளார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாஜ, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பரப்ப முயற்சித்து வரும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியர் சுப்பிரமணியை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் இச்செயலில் ஈடுபட்டுள்ளது,’’ என கண்டித்துள்ளார்.

 

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் குறித்து நூல் எழுதிய பேராசிரியருக்கு மெமோ: தலைவர்கள், பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Periyar ,Salem Periyar University ,Salem ,Periyar.… ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை.யில் நிதி...