×

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல், பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கடந்த 4. 5ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கனமழை தொடர்ந்ததால் அன்றைய தினமும் பொது விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக 6ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மற்ற தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி (நேற்று) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

The post சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai district ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...