தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் வித்தியாசமான முறையில் விலங்குகளின் முகம் போன்று தலைக்கவசம் (அனிமல் ஹெல்மெட்) அணிந்து கொண்டு பைக்கில் வேகமாக வந்த வாலிபரை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறைக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் குற்றாலம் போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட வாலிபர் தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் சுஜித் (25) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
The post ‘அனிமல் ஹெல்மெட்’ அணிந்த வாலிபருக்கு ₹10 ஆயிரம் பைன்: பைக் பறிமுதல் appeared first on Dinakaran.
