×

குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்கு குவிந்தன கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடக்கம்

*பிரமாண்ட அலங்கார குடில்களும் அமைகின்றன

நாகர்கோவில் : குமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடில் அமைப்பது, ஸ்டார்கள் மற்றும் அலங்காரங்கள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும்.

வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப் பாடல்கள் என்று கொண்டாட்டங்கள் களை கட்டி இருக்கும். இதேபோல் மாவட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாடப்படும்.

கிறிஸ்துமஸ் விழாவின் பிரதான அடையாளமான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். கிறிஸ்தவ ஆலய வளாகங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். வீடுகளில் சிறு அளவிலான குடில்கள் அமைக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில், ெகாண்டாட்டத்துக்கான ஆயத்தப் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் அமைப்பதற்கான பொருட்கள் கடைகளில் குவிந்து வருகின்றன.

பல விதமான வண்ணங்கள், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்காக உள்ளன. கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்கான பொருட்களும் அதிகளவில் விற்பனைக்கு உள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, பரிசு பொருட்கள், பலூன்கள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவையும் வந்துள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல், புதுக்கடை, தக்கலை, அருமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

நாகர்கோவிலில் மணிமேடை பகுதி, டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் இப்போதே கண்களை கவரும் வகையில் பலவிதமான ஸ்டார்கள் விற்பனைக்காக தொங்க விடப்பட்டுள்ளன. குடில் அமைக்கும் பொருட்களும் இந்த ஆண்டு பல வித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. டிசம்பர் 2 வது வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆலயங்கள் புதுப்பிப்பு பணிகளும் நடைபெறும். வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் ஜொலிக்கும். கடலோர கிராமங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை களை கட்டும். வெளி மாநில மற்றும் வெளிநாடுகளுக்கு மீன் பிடிக்க சென்று இருப்பவர்கள் டிசம்பர் 10க்கு பின்னர் படிப்படியாக ஊர் திரும்புவார்கள். இதனால் கடலோர கிராமங்கள் களை கட்டி இருக்கும். புத்தாண்டு வரை கொண்டாட்டங்கள் நடைபெறும்.

The post குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்கு குவிந்தன கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Christmas ,Nagercoil ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது