சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 1,441 நீர்நிலைகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பொழிகிறது. அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப்பொழிவில் 48 சதவிகிதம் தமிழகத்திற்கு கிடைக்கிறது.
மேலும் கடந்த ஆண்டுகளை விட புயல்கள் உருவாக கூடும் எனவும், இந்தாண்டு இயல்பை விட 38 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி தென்மேற்கு பருவமழையின் போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், நேற்றைய நிலவரம்படி சிதம்பரத்தில் கடலூரில் 168மி.மி., விழுப்புரம் 112மி.மி., காட்டுமன்னார் கோயிலில் 110 மி.மி., குறிஞ்சிபாடி 109 மி.மி., மழையானது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,134 பாசன ஏரிகளில் 1,441 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, 1,848 ஏரிகள் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 1,814 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மிக குறைந்த அளவில் 4900 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது : வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தமிழ்நாட்டில் இந்தாண்டு இயல்பை விட 35 விழுக்காடு அதிகமாக மழை பெய்ததால் முக்கிய ஏரிகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டுமளவுக்கு நீர் உள்ளது. நேற்றைய நிலவரம்படி, அதிகபட்சமாக 2040 பாசன ஏரிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 398 பாசன ஏரிகள் முழு கொள்ளளவாக நீர் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 697 பாசன ஏரிகளில் 115 ஏரிகள் முழு கொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.
அதேபோல், தென்காசி மாவட்டத்தில் 543 ஏரிகளில் 115 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும். அதன்படி மழை தொடர்ந்து பெய்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* சென்னை ஏரிகளில் 76% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு உள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 76 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீரால் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
The post வடகிழக்கு பருவமழை காரணமாக 1,441 நீர்நிலைகள் நிரம்பியது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.
