×

மாமல்லபுரத்தில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

 

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால் மாமல்லபுரத்தில் கள்ளத் தனமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த, கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது. மாமல்லபுரத்தில் இயங்கும் ஒரு டாஸ்மாக் கடையில் அதிகாலை முதலே அனுமதி பெறாத பாரில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகவும், குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டும், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகளை அங்கேயே வீசி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து, இசிஆரில் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் குடிமகன்கள் தொல்லை கொடுத்தனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி உடனடியாக தலையிட்டு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்களை பிடித்து அனுமதி பெறாமல் பார் இயங்குகிறதா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாமல்லபுரம் மற்றும் வடகடம்பாடி ஆகிய பகுதியில் இயங்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே நேற்று போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த மாமல்லபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24), ஜோசப் (53) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, இது போன்று கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் யாராக இந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

The post மாமல்லபுரத்தில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத...