![]()
சென்னை: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நடந்தது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பருவமழைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தெற்கு ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மீன்வளத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பிஎஸ்என்எல், சென்னை மாநகர போக்குவரத்து, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், கடலோரக் காவல் படை, சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மேயர் பிரியா அலுவலர்களுடன் கூறியதாவது: சென்னை வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரைகளின்படி நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்து, சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால்களில் நடைபெற்று தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட வண்டல்களை சாலைகளில் தேக்கி வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சுரங்கப்பாதைகளின் தொட்டிகளை தூர்வாரி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சுரங்கப்பாதைகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக 41 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைத்திருக்கவும், மழையின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் மர அறுவை இயந்திரங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் வைக்கவும், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், பெட்ரோல் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், மின்சாரத்தால் இயங்கும் 8 மர அறுவை இயந்திரங்கள், இரவு நேரங்களில் விழும் மரங்களை அகற்றிடும் வகையில் இரவு நேரக் குழுக்கள் மற்றும் 18 நடமாடும் உயர்கோபுர மின்விளக்குகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை வெள்ளத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய வகையில் மாநகராட்சி பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள் என 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்திடவும், மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 101 நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் பாலங்கள், சிறு பாலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக தேவையற்ற திடக்கழிவுகள், செடி, கொடிகள் போன்றவற்றை அகற்றிடவும், தேவையான எண்ணிக்கையில் நீரிறைக்கும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்கவும், விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்திடவும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்திட வேண்டும்.
சென்னையில் மின்சார வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் புதைவடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனடியாக சீர்செய்ய 24 மணிநேரமும் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சாரப் பெட்டிகள் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர்கள், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், காவல்துறை, தீயணைப்புத் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு, பி.எஸ்.என்.எல்., உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை, கடலோரக் காவல் படை, சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட பிற சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* தயார் நிலையில்…
மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு கொசு மருந்து, கொசுப்புகை மருந்துகள், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவிற்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மழைநீரை வெளியேற்ற 503 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திருக்கவும், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மீன்வளத்துறையின் சார்பில் படகுகள் தயார்நிலையில் வைத்திருக்கவும், நிவாரண மையங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையலறைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* கட்டுப்பாட்டு அறை
ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாருதல் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வழிவகை செய்ய வேண்டும். எண்ணூர், நேப்பியர் பாலம், அடையாறு மற்றும் முட்டுக்காடு ஆகிய கழிமுகத் துவாரங்களில் பொக்லைன் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கவும், மழைநீர் எளிதில் கடலில் கலக்கும் வகையில் கழிமுகப் பகுதிகளை அகலப்படுத்த வேண்டும். வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைக்கவும், மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பொறுப்பு அலுவலரை நியமித்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என உத்திரவிடப்பட்டுள்ளது.
The post வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம்: மேயர் பிரியா தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.
