
புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகவும் சிறப்பான ஒன்று.
அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது. பெண்களுக்கான அதிகாரமளிப்பதில் ஒரு முக்கிய படியாகும். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி எல்லை வரையறை ஆகியவை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்தாமல் ஒத்திவைப்பதற்கான மோசமான காரணங்களாகும். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்புவதற்காக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.
ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நடத்தப்பட்ட முந்தைய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி எல்லை வரையறை இணைக்கப்பட்டுள்ளதால் அடுத்த 10 ஆண்டுகளில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படாது” என்றார்.
The post மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.