இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரம் : பூஜை விடுமுறையால் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து களைகட்டியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் எனும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு வருகின்றனர். படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் சரஸ்வதி மற்றும் ஆய்த பூஜை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரத்திற்கு வந்தனர். மேலும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  சுற்றலா பயணிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் பார்த்து ரசித்தனர்.

Related Stories: