குலசேகரம், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டம் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மலையில் இருந்து அணைகளுக்கு வரும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வருகிறது. குமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் முக்கிய ஆறுகளான கோதையாறு, பரளியாறு போன்றவற்றில் நீர்வரத்து அதிகரித்து கரைபுரண்டு ஓடுகின்றன. கோதையாற்றில் நீர் வரத்து அதிரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.