ஊட்டி: இண்டாம் சீசன் துவங்க நான்கு நாட்களே உள்ள நிலையில், ெதாட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தவில்லை என்றாலும், அதற்கு இணையாக மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி பூங்கா முழுவதிலும் புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பூக்கள் பூத்து குலுங்கும். இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகள் கடந்த ஒரு மாத்திற்கு முன் துவங்கியது. அதே போல் 10 ஆயிரம் தொட்டிகளிலும் பல்வேறு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் துவக்கத்தில் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.
ஆனால், இம்முறை பெரும்பாலான செடிகளில் மொட்டுக்கள் மட்டுமே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் உள்ள சால்வியா செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. ஓரிரு நாட்களில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறையின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து செடிகளிலும் மலர்களை காண வாய்ப்புள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் விடுமுறையை கொண்டாட வந்துள்ள சுற்றுலா பயணிகள் சால்வியா, பெகுனியா போன்ற மலர்களை மட்டுமே கண்டு ரசித்து செல்ல முடியும்.