சுரண்டை: சாம்பவர்வடகரை பகுதி தோட்டங்களில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்களுக்கு மத்தியில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.நெல்லை மாவட்டத்தின் மேற்குபகுதியில் பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சாம்பவர்வடகரை. இங்கிருந்து ஆய்க்குடி வழியாக தென்காசி செல்லும் சாலையின் இருபுறமும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த ரம்மியமான காட்சி அவ்வழியாக செல்பவர்களை பரவசமடைய செய்கிறது. குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சூரியகாந்தி தோட்டத்தை பார்வையிட கார்களில் வந்து குவிகின்றனர். இவர்கள் அந்திசாயும் நேரத்தில் சூரிய வெளிச்சத்தில் சூரியகாந்தி தோட்டங்களின் நின்று ஜாலியாக செல்பி எடுத்து மகிழ்வதுடன் அதனை சமூக வலையதளத்தில் பரவவிடுகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்காக விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுமண தம்பதிகளும் புகைப்பட கலைஞர்களுடன் வந்து விதவிதமாக போஸ் படம் எடுத்து ெசல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருவதால் நுங்கு வியாபாரம் படுஜோராக நடக்கிறது.