×

நம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்

இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழகிப்போன நம்மில் பலருக்கு இயற்கை சூழலில் மூலிகை வாசம், பச்சை பசேலென இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, மலை பயணம், இரு மொழி பேசுவோரின் கலாசார சந்திப்பு, இதுவல்லவா பயணம் என அசர வைப்பதுதான் செங்கோட்டை - தென்மலை பயணம். இங்கு சுற்றுலா செல்வதற்கு பேருந்தை தேர்வு செய்வதை காட்டிலும் ரயிலில் செல்வதே சிறப்பு.

செங்கோட்டையிலிருந்து தமிழக, எல்லை பகுதியான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு மலைப்பகுதிக்கு செல்லும் சாலை, ‘எஸ்’ வடிவில் ஏறிச்செல்கிறது. ‘எஸ் வளைவு’ என அழைக்கப்படும் இந்த இடத்தில், ரயில் வழித்தடம், சாலையை மேல்புறமாக, பாலத்தின் வழியே கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் சென்றால் இந்த தடத்தில் 100 சிறிய பாலங்கள், 3 பெரிய பாலங்கள், 5 குகைகள் போன்றவற்றை பார்க்க முடியும்.

செங்கோட்டையிலிருந்து எஸ்.வளைவை தாண்டியதும் முதல் குகையில் பயணிக்கலாம். நியூ ஆரியங்காவு பகுதியில் 2வது குகையும், எடமண் பகுதியில் 3வது குகையும், தொடர்ந்து அருகருகே 4வது மற்றும் 5வது குகையிலும் பயணிக்கலாம்.  இந்த பாதையில் ரயிலில் செல்லும் அனுபவம் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் வெகுவாக  கவரும். இந்த வழியே செல்லும்போது ரயில் 20 முதல் 30 கி.மீ வேகத்திலேயே செல்லும். இந்தப்பாதையை சுற்றுலா பாதையாக அறிவிக்க ரயில்வே துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது

ஆரியங்காவை அடுத்த கழுதுருட்டியில் இருந்து சரியாக ஒரு கி.மீ., தூரத்தில், 13 கண் பாலம் அமைந்துள்ளது. புராதான சிறப்பு வாய்ந்த இந்த பாலத்தில் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 150 மீட்டர் நீளமும், 60 அடி உயரமும் உள்ள இந்த பாலம், 13 ஆர்ச் முகப்புகளும், 12 பெரிய தூண்களுடனும், பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
செங்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை தோறும் வேளாங்கண்ணி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், நெல்லை பாலக்காடு ரயிலிலும் தினசரி ரயிலான செங்கோட்டை கொல்லம் ரயிலிலும் செல்லலாம்.

செங்கோட்டையிலுள்ள ரயில் நிலைய தொலைபேசி எண்கள்: 04633- 233188 - 235354. போலீஸ் நிலைய தொலைபேசி எண்: 04633- 233274. அரசு மருத்துவமனை தொலைபேசி எண்:04633- 233144. (சனிக்கிழமை தோறும்)

Tags : Sengottai - Southern Railway ,
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!