பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சத்தியமங்கலம், ஏப். 22: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா உள்ளது. பூங்காவில் படகு வசதி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுவதற்கு ஊஞ்சல், செயற்கை நீரூற்று மற்றும் அழகிய கூடாரங்கள் உள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது பள்ளி விடுமுறை, அரசு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.

ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நேற்று பூங்காவிற்கு வந்திருந்தனர். அணை பூங்காவில் உள்ள படகில் குடும்பத்துடன் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். சிறுவர் மற்றும் சிறுமியர் சறுக்கு மற்றும் ஊஞ்சல்களில் விளையாடி மகிழ்ந்தனர். பூங்கா நுழைவுக்கட்டணம் ஒரு நபருக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படுவதால் குறைந்த செலவில் சென்றுவர மிக ஏற்ற சுற்றுலா தலமாக பவானிசாகா் அணை பூங்கா விளங்குகிறது. அணையின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் ரோஸ்ட்டை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

Related Stories: