ஊட்டி: மகாவீர் ஜெயந்தி, புனிதவெள்ளி, ஈஸ்டர் என 5 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 96 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்த்து ரசித்து சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டி நகரில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சர்வதேச சுற்றுலா நகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
குறிப்பாக ஏப்ரல், மே மாத கோடை சீசன் சமயத்தின் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவார்கள். இந்தாண்டுக்கான கோடை சீசன் துவங்கிய நிலையில் சமவெளி பகுதிகளான கோவை, மேட்டுபாளையம் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கோடை வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகளும் அதிகளவு ஊட்டியில் குவிகின்றனர்.
இந்நிலையில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனை ெதாடர்ந்து விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரத் துவங்கினர். வாக்குபதிவு நடைபெற்ற 18ம் தேதி மட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. அதன்பின் கடந்த 5 நாட்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தளங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். அதற்கேற்றார் போல் ஊட்டியில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அதிகளவு வாகனங்கள் வந்த நிலையில், போதுமான முன்னேற்பாடுகள் ெசய்யப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த 16ம் தேதி 15 ஆயிரத்து 922 ேபரும், 17ம் தேதி 11 ஆயிரத்து 107 பேரும், 18ம் தேதி 14 ஆயிரத்து 714 பேரும், 19ம் தேதி 20 ஆயிரத்து 200 பேரும், 20ம் தேதி 19 ஆயிரத்து 473 பேரும், நேற்று சுமார் 15 ஆயிரம் பேரும் என 96 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.