ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிதம்பரம் : கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் பிச்சாவரம் சுற்றுலா மையம் களைகட்டியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்ைன செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவம் குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. சுரபுன்ைன காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று ரசித்து வருகின்றனர். வனத்துறை சார்பிலும் படகுகள் விடப்பட்டுள்ளன.  பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் வனப்பகுதியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வளாகத்தில் சிறுவர் பூங்கா, தங்கும் அறைகள், உணவகம், மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு கார் மற்றும் வேன்களில் வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிதம்பரத்தில் இருந்து அருகாமையில் இருப்பதால் பிச்சாவரத்துக்கு வந்து படகு சவாரி சென்று வருகின்றனர். கடந்த 25ம் தேதி முதல் தொடர்ந்து கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறை வந்ததால் பிச்சாவரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நேற்று காலை முதல் நடராஜர் கோயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அது போன்று பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கும் நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் வெகுவாக பார்த்து ரசித்தனர்.

Related Stories: