சென்னை: ஆளுமை மிக்க தலைவர் கலைஞர், இந்திய அரசியலின் ராஜதந்திரி கலைஞர் என்று முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், எதை எப்போது செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்ற பக்குவம் கொண்டவர் கலைஞர். எம்.ஜி.ஆர் உடல்நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என எழுதினார் கலைஞர். நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர். மக்கள் அளித்திருக்கும் பொறுப்பு, அதிகார பகட்டை காட்டுவதற்காக அல்ல. பொதுச்சொத்துகளை, அறக்கட்டளையின் சொத்துகளை போன்று காக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கலைஞர் சன்னதியில் உண்மையை பேச வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய கோபாலகிருஷ்ண காந்தி, சிந்தித்துவிட்டு பேசுபவர்கள், பேசிவிட்டு சிந்திப்பவர்கள் என இரண்டு வகையான அரசியல்வாதிகள் உண்டு. ஊழல் என்பது ஒன்றுதான்; அதை ஆளுங்கட்சியின் ஊழல், எதிர்க்கட்சியின் ஊழல் என்று பார்க்கக் கூடாது என தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
The post ஆளுமை மிக்க தலைவர் கலைஞர், இந்திய அரசியலின் ராஜதந்திரி கலைஞர்: மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம் appeared first on Dinakaran.