குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் கடந்த 10  நாட்களாக தண்ணீர் நன்றாக விழுந்தது. இரண்டு முறை மெயினருவியில் குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு கொட்டியது. அவ்வப்போது தொடர்ந்து மாலை வேளைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று முன்தினம் மாலையில் நல்ல மழை பெய்த நிலையில் நேற்று மாலை வரை மழை இல்லை. பகலில் வெயில் காணப்பட்டது. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது.

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.

பழையகுற்றாலம், புலியருவியிலும் தண்ணீர் நன்றாக கொட்டியது. நேற்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் பல மாவட்டங்களில் மழை பெய்ததாலும் புயல் பாதிப்பு காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. ஐயப்ப பக்தர்களும் மாலை மற்றும் இரவு வேளைகளில் தான் ஓரளவு வருகை தருகின்றனர். பகலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் குறைவாக வந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: