திருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள நீரூற்று பகுதிகளை பார்த்து பரவசமடைந்தனர். அதேபோல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கினர்.